அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி


அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 22 Jan 2019 11:30 PM GMT (Updated: 22 Jan 2019 8:58 PM GMT)

அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

கரூர்,

ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று வட்டார அளவில், தாலுகா அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பாக நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈசநத்தம் என்ற இடத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சின்னதாராபுரம் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததை பார்த்ததும் ஸ்டாலின் தனது காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு சென்றார். அப்போது ஸ்டாலினை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனைதொடர்ந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்தியில் பேசியதாவது:-
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்தி பேசி இருக்கிறேன். சட்டசபையிலும், விவசாயிகள் பிரச்சினை, நெசவாளர் பிரச்சினை பற்றி பேசியபோது ஆசிரியர், அரசு ஊழியர்களான உங்களது போராட்டத்தில் உள்ள நியாயங்களையும் எடுத்து கூறினேன். ஆனால் அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான போராட்டத்தில் இதுவும் ஒன்று என்கிற வகையில் பதில் அளித்தார்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். நாங்கள் நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் கூட உங்களது பிரச்சினைகள் பற்றி பேசி இருக்கிறேன். உங்களது கோரிக்கைகள் இந்த ஆட்சியில் தீர்த்து வைக்கப்படவில்லை என்றால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ஈசநத்தம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் நேற்று ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அந்தந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர், பஸ் வசதி, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை பற்றி பேசினார்கள்.

முடிவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தி இருந்தால், இந்த ஊராட்சி சபை கூட்டத்தை நாங்கள் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது. இந்த கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட குறைகள் எல்லாமே உள்ளாட்சி அமைப்புகளால் தீர்த்து வைக்கப்பட கூடிய பிரச்சினைகள் தான்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க. தோற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாக நடத்தாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாததற்கு தி.மு.க. கோர்ட்டில் தடை வாங்கியது தான் காரணம் என்று ஒரு அபாண்டமான பொய்யை திரும்ப, திரும்ப சொல்லி வருகிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்த மறுநொடியே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற உறுதியை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story