தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்
தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டில் தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மாநாட்டின் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்று உள்ளனர்.
மாநாட்டில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பேசும் போது, முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்ற விவரத்தை நாளை நடக்கும் நிறைவு விழாவில் முதலமைச்சர் வெளியிடுவார் என கூறினார்.
மாநாட்டில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும் போது கூறியதாவது:-
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தமிழ்நாட்டை மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றுவதே முதலீட்டாளர் மாநாட்டின் நோக்கம் என கூறினார்.
மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது கூறியதாவது:-
தமிழகம் தொழில்துறையில் கடந்த சில ஆண்டுகளாக மட்டும் சிறந்து விளங்கவில்லை. பல நூற்றாண்டுகளாக தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்கி வருகிறது.
தமிழகம் மாநிலம் கடந்து, ஏன் கடல் கடந்து கூட பல நூற்றாண்டுகளாக வர்த்தகம் செய்து வருகிறது. தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னோடிகளாக ஒரு காலத்தில் திகழ்ந்தனர், அதை தமிழகம் மீண்டும் நிரூபிக்கும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தில் தமிழகம் பழங்காலத்திலேயே சிறந்து விளங்கியது.
தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை தமிழகத்தின் வர்த்தக சிறப்புக்கு பழங்காலம் முதல் தற்போது வரை உதாரணமாக விளங்கும் நகரங்கள்.
பூம்புகார் துறைமுகம் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை பிற நாடுகளுடன் இணைத்திருந்தது.
கம்போடியா நாட்டிற்கு சென்றால் தமிழகத்தின் பழம்பெரும் வர்த்தக தொடர்பை தெரிந்து கொள்ள முடியும்.
கற்பனைக்கு எட்டாத வகையில் சோழர்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்கினர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது தமிழக அரசின் மிகச்சிறந்த யோசனை.
கம்போடியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் பழங்கால தமிழர்கள் வர்த்தகத்தில் முத்திரை பதித்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி வேகம் எடுத்து வருகிறது.
நாட்டின் பணவீக்கம் மிகச்சிறப்பான முறையில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 விழுக்காடாக இருக்கும் என்று ஐ.எம்.எப். கணித்துள்ளது.
ஜி.எஸ்.டி அமல்படுத்தியதன் மூலம் வர்த்தக துறையில் மோடி அரசு மிகச்சிறந்த சீர்திருத்தத்தை செய்துள்ளது.
தொழில்புரிவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்திய வேகமாக முன்னேறி 77வது இடத்திற்கு வந்துள்ளது.
அறிவுசார் சொத்து தொடர்பான வர்த்தகத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாக ஐ.நா. தொடர்புடைய அமைப்புகள் கூறுகின்றன.
இந்தியாவின் இ கவர்னன்ஸ் சிஸ்டத்தையும் ஐ.நா. பாராட்டுகிறது.
தமிழகம் தற்போது மின் மிகை மாநிலமாக திகழ்வது தொழில்துறையினருக்கு வரப்பிரசாதம்.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
விவசாயம், தொழில்துறை என பலவற்றிலும் தமிழகம் சாதகமான சூழலை கொண்டுள்ளது.
தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது.
தமிழகம் சிறந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது.
தமிழகத்திற்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என கூறினார்.
வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story