சென்னையில் இருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை- ஜப்பான் தூதர்


சென்னையில் இருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை- ஜப்பான் தூதர்
x
தினத்தந்தி 23 Jan 2019 7:21 AM GMT (Updated: 23 Jan 2019 7:21 AM GMT)

சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவக்கி வைக்கப்படும் என 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டில்  தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.  தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மாநாட்டின் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம்,  அமைச்சர்கள்  மற்றும் தொழில்  அதிபர்கள் பங்கேற்று உள்ளனர்.

மாநாட்டில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பேசும் போது,  முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்ற விவரத்தை நாளை நடக்கும் நிறைவு விழாவில் முதலமைச்சர் வெளியிடுவார் என கூறினார்.

 தமிழகத்தில் அதானி குழுமம் ரூ 12,000 கோடி முதலீடு செய்ய உள்ளது என அதானி குழும பிரதிநிதி கூறினார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று பேசிய ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமத்சு, வரும் அக்டோபர் மாதம் முதல் விமான சேவை தொடங்கும்.

இந்த விமான சேவை மூலம் சென்னைக்கும், ஜப்பானுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும். ஜப்பான் நாடு சார்பில் தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில்  நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளன. 

தமிழகத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நாடு துணை நிற்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஜப்பான் நிதியுதவி செய்துள்ளதாகக் கூறிய அவர், சென்னை மெட்ரோ சிறந்த சேவை புரிந்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

Next Story