எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்


எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்
x
தினத்தந்தி 23 Jan 2019 10:34 AM GMT (Updated: 23 Jan 2019 10:34 AM GMT)

எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை, கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்பேன் என கோடநாடு கொள்ளை விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேல் கூறி உள்ளார்.

சென்னை,

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வந்த மேத்யூ சாமுவேல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மம்தா கூறுகிறார் என் பின்னால் பாஜக இருப்பதாக. முதல்வர் பழனிசாமி கூறுகிறார் என் பின்னால் திமுக இருப்பதாக. உண்மையை சொல்லப்போனால் என்னை யாரும் இயக்கவில்லை, என் பின்னால் யாரும் இல்லை. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்பேன். நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிசாமிக்கு எதிரானதுதான், ஆனால் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை.

ஜெயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும்  என கூறியுள்ளார்.

Next Story