மிகுந்த சிரமத்திற்கு இடையில் பிடிபட்டது சின்னத்தம்பி யானை
கோவை தடாகம் அருகே சின்னத்தம்பி என்ற காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் சோமையனூரில் தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் சின்னத்தம்பி என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். இந்த யானை தொடர்ச்சியாக விளைநிலங்களை சேதப்படுத்துவதாக புகார் தெரிவித்த விவசாயிகள் யானையை பிடிக்க வலியுறுத்தி வந்தனர்.
அதனைத்தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து கலீம், விஜய், முதுமலை, சேரன் என்ற நான்கு கும்கி யானைகளுடன் வனத்துறையினர், காட்டு யானை சுற்றித்திரியும் பகுதிக்கு சென்றனர். சின்னத்தம்பி யானைமீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டும் அந்த யானை அசராமல் நின்றது. பின்னர் வனத்துறையினர் அதனை மிகுந்த சிரமத்திற்கு இடையில் பிடித்தனர்.
மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க உதவினர்.
சின்னத்தம்பி யானையை கோவை டாப்சிலிப் அருகேயுள்ள வரகளியாறு என்ற இடத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story