அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பொதுமக்களே முதலாளிகள் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பொதுமக்களே முதலாளிகள் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:15 PM GMT (Updated: 5 Feb 2019 9:37 PM GMT)

அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பொதுமக்களே முதலாளிகள் என்றும், இந்த நிலங்களை சட்டவிதிகளை பின்பற்றிதான் ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழக அரசுக்கு, வி.ஐ.டி., பல்கலைக் கழகம் மனு கொடுத்தது.

இந்த கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு, ‘வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு ஏற்கனவே அப்பகுதியில் 98 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வேலூரில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக, இந்த 42 ஏக்கர் நிலமும் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த 42 ஏக்கர் நிலம் விளையாட்டு மேம்பாட்டுக்காக, அதாவது பொது பயன்பாட்டுக்காக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிலத்தை ஒதுக்கி அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே, அந்த நிலத்தில் விளையாட்டு அரங்கை அமைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம்.

மேலும், மாநிலம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கான நில ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யவேண்டும். அதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் அந்த ஒதுக் கீட்டை ரத்து செய்து, நிலத்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக தமிழக அரசு மார்ச் 4-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

அரசு புறம்போக்கு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தங்களுக்கு ஒதுக்கீடு செய்துதர வேண்டுமென தனியார் கல்வி நிறுவனங்கள் உரிமையாக கோர முடியாது. அதேபோல அரசும் தனது இஷ்டம்போல புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க அதிகாரம் கிடையாது. புறம்போக்கு நிலங்களுக்கு பொதுமக்கள்தான் முதலாளிகள். சட்டவிதிகளுக்கு உட்பட்டே புறம்போக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்ய முடியும்.

அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் பொதுமக்கள் நலனுக்கு எதிராக இருந்தால் அவை அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகத்தான் கருத முடியும். அதில் நீதிமன்றம் தலையிட முடியும்.

ஏழை மக்கள் வாழ்வாதாரத்துக்காக சொற்ப அளவில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தால், அவர்களை அப்புறப்படுத்தி, அந்த நிலத்தை மீட்க அதிரடி நடவடிக்கையில் அரசு இறங்குகிறது. அதேநேரம், வணிக நோக்கில் செயல்படும் பெரிய நிறுவனங்கள் ஏக்கர் கணக்கில், அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும்போது கண்டுகொள்ளாதது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது.

எனவே அரசு நிலங்களை பாரபட்சமும் இல்லாமல் ஒதுக்கீடு செய்யும் வகையில் புதிய விதிகளை வகுக்கவேண்டும். வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story