முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை ; ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-கமல்ஹாசன்


முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை ; ஒரே மேடையில்  மு.க.ஸ்டாலின்-கமல்ஹாசன்
x
தினத்தந்தி 11 Feb 2019 5:21 AM GMT (Updated: 11 Feb 2019 7:43 AM GMT)

கமல்ஹாசனை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதபட்டு உள்ளது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன் அமர்ந்து உரையாடினர்.

சென்னை

பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன.

இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புகிறது.

கமலும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விருப்பமான மனநிலையிலேயே இருக்கிறார். ஏற்கனவே கமல் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

தி.மு.க.வை பொறுத்தவரை 20 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் காங்கிரஸ்-8, இந்திய கம்யூனிஸ்டு-1, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-1, ம.தி.மு.க.-2, விடுதலை சிறுத்தைகள்-1, முஸ்லிம் லீக்-1 என்ற விகிதத்தில் பேசி வருகிறார்கள்.

காங்கிரஸ் தொகுதிகளில் ஒரு தொகுதியை குறைத்து 2 அல்லது 3 சீட் வரை கமலுக்கு கொடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால் கமல் 2 தொகுதிகள் என்றால் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை. 

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி   பேட்டி அளிக்கும் போது  மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த நிலையில்  அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் , பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை. கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

திமுகவை கமல் விமர்சித்தது கவனத்துக்கு வராததாலேயே அவரை கூட்டணிக்கு அழைத்தேன். திமுக மீதான கமலின் விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு உதவும். எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி தலைமையிலான கூட்டணி தான் முடிவு செய்யும்.



திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

இதற்கிடையில் திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. பூம் பூம் காரனின் மாடு என்ன் செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. 

இந்த் நிலையில்  சென்னை திருவான்மியூரில் நடைபெறும் திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல் பங்கேற்று உள்ளனர்
அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் சகஜமான  முறையில்  உரையாடினர்.

திருமண விழாவில் நல்ல கூட்டணி அமைந்துள்ளது, இந்த கூட்டணி தொடர வேண்டும் என கனிமொழி  எம்.பி பேசினார்.

Next Story