காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்


காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2019 8:30 PM GMT (Updated: 13 Feb 2019 7:31 PM GMT)

காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர், 

காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நம்பி வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலனுக்கு தக்க தண்டனை பெற்று தரும்படி உயிர்விடும்முன் ‘வாட்ஸ்-அப்’பில் தனது தாயாருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

துணை நடிகை

திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்ற யாசிகா(வயது 21). சினிமா துணை நடிகையான இவர், நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த யாசிகாவுக்கு, செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்துவந்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

காதலனுடன் வசித்தார்

திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 22-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாசிகாவுடன் கோபித்துக்கொண்டு மோகன்பாபு, பெரம்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

தான் நம்பி வந்த காதலன், தன்னை தனிமையில் தவிக்கவிட்டு சென்றதால் யாசிகா, மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யாசிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரவள்ளூர் போலீசார், தூக்கில் தொங்கிய யாசிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

‘வாட்ஸ்-அப்’பில் தகவல்

இதற்கிடையில் யாசிகா, தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, “நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்” என தனது தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story