பெண் டாக்டர்களால் நடத்தப்படும் அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் 16–ந் தேதி தொடங்குகிறது


பெண் டாக்டர்களால் நடத்தப்படும் அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் 16–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 13 Feb 2019 9:45 PM GMT (Updated: 13 Feb 2019 8:24 PM GMT)

பெண் டாக்டர்களால் நடத்தப்படும் அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் 16–ந் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது.

சென்னை, 

பெண் டாக்டர்களால் நடத்தப்படும் அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் 16–ந் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது.

எண்டாஸ்கோப்பி மாநாடு

அகில இந்திய என்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் வருகிற 16 (நாளை மறுதினம்) மற்றும் 17–ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. மாநாட்டின் தொடக்க விழா சென்னை ஹில்டன் ஓட்டலில் நடைபெறுகிறது.

இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஐயேஜ் அமைப்பின் தலைவர் ரிஷ்மா தில்லான்பாய், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்(லண்டன்) டாக்டர் ஏடியோலா ஓலய்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில் லேப்பராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்டராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார்கள். இது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாகும்.

அறுவை சிகிச்சை

இந்த மாநாடு ‘ஐயேஜ்’, ‘ஆக்ஸி’, ‘ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி.’ என்ற 3 அமைப்புகளின் கீழ் நடக்க இருக்கிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் நிறுவனத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட இருக்கிறது. அதை சென்னை ஹில்டன் ஓட்டலில் இருந்து 200–க்கும் மேற்பட்ட மகளிர் நல டாக்டர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

லேப்பராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்வதால், வலி குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், பெண்கள் மிக விரைவில் எழுந்து அன்றாட குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ள முடிகிறது.

இந்த மாநாட்டில் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் இருந்து நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாடவும், விவாதிக்கவும் இருக்கின்றனர். அகில உலக மகளிர் தினத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், பெண் டாக்டர்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த மாநாடு பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் அமையும்.

மேற்கண்ட தகவலை இந்த மாநாட்டின் அமைப்பு குழு தலைவர் டாக்டர் ரேகா குரியன் தெரிவித்தார்.


Next Story