டெல்லி சொகுசு ஓட்டலில் தீ விபத்து: மூச்சு திணறி பலியான திருச்சி டாக்டர் பற்றி உருக்கமான தகவல்கள்


டெல்லி சொகுசு ஓட்டலில் தீ விபத்து: மூச்சு திணறி பலியான திருச்சி டாக்டர் பற்றி உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 9:38 PM GMT)

டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான திருச்சி டாக்டர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி, 

டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான திருச்சி டாக்டர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி டாக்டர்

டெல்லியில் கரோல்பார்க் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த டாக்டர் சங்கரநாராயணன் (வயது 55) உள்பட 17 பேர் பலியாகினர். டாக்டர் சங்கரநாராயணன் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் பல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும் திருச்சி புத்தூர் பாரதி நகரில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வந்தார். ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையிலும் பெயர் பெற்றவர். இவரது வீடு திருச்சி ராமலிங்க நகர் 7-வது குறுக்குத்தெருவில் உள்ளது.

டாக்டர் சங்கரநாராயணனின் மனைவி பாரதி (50). இவர்களுக்கு ராகவ சிம்கன் (23) என்ற மகனும், ரங்க பிரியா (20) என்ற மகளும் உள்ளனர். மகன், அமெரிக்காவில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். மகள் ரங்கபிரியா சென்னையில் தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். சென்னையில் இ.சி.ஆர். சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இவருக்கு வீடு ஒன்றும் உள்ளது.

ராணுவ வீரர்களுக்கான சிகிச்சை

சென்னையில் உள்ள வீட்டில் மனைவி, மகளும் தங்கி உள்ளனர். வாரத்தில் 2 நாட்களுக்கு மேல் டாக்டர் சங்கரநாராயணன் அங்கு தங்கியிருப்பது உண்டு. திருச்சி வீட்டில் டாக்டரும், அவரது தாயார் வேதவள்ளியும் வசித்து வந்தனர்.

ராணுவ வீரர்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சை முறையை டாக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான அனுமதியை பெறுவதற்காக டெல்லி சென்றபோது டாக்டர் சங்கரநாராயணன், தீ விபத்தில் சிக்கி மூச்சு திணறி பலியானார்.

டாக்டர் சங்கரநாராயணனின் உடலுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வேளச்சேரியில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவரது உடலை பெறுவதற்காக மனைவி, மகளும், உறவினர்களும் டெல்லி சென்றனர்.

Next Story