அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு


அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2019 12:00 AM GMT (Updated: 17 Feb 2019 10:21 PM GMT)

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் என்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நமது இலக்கு அல்ல. 2017-ல் அரசியல் அறிவிப்பை வெளியிடும் போதே சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்பதை தெளிவாக கூறியிருந்தேன். நமது இயக்கம் வித்தியாசமானது. நிர்வாகிகள் யாரும் பணம், பதவியை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இப்போதே இங்கிருந்து வெளியேறி விடலாம்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவும். நாம் சட்டமன்ற தேர்தலை மட்டும் எதிர்கொள்வோம். அதில் நமது பலத்தை நிரூபிப்போம். அந்த நேரத்தில் நமக்கு சாதகமான அலை வீசும். மகான்கள் ஆசி, கடவுள் ஆசி, மக்களின் ஆசி நமக்கு இருக்கிறது.

சட்டசபை தேர்தல் முன்கூட்டி வர வாய்ப்பு இல்லை. இப்போதைக்கு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சி அதற்கு தேவையானவற்றை எல்லாம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடும். தற்போது நமது இயக்கத்தில் 50 சதவீதம் பூத் கமிட்டி வேலை முடிந்து இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலை சந்தித்து எதிரணிக்கு வெற்றியை உருவாக்கி கொடுத்துவிடக்கூடாது.

சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற உள்ள நிலையில், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் தனிக்கட்சி தொடங்குவோம். அப்போது கட்சியை தொடங்கினாலும் தேர்தலை சந்திப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது. ஒருவேளை அரசியல் சூழ்நிலை காரணமாக முன்கூட்டியே கட்சியை தொடங்க வேண்டியது ஏற்பட்டால் அதற்கும் தயாராகுவோம்.

நாம் தனிக்கட்சி தொடங்கும்போது, முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் நம்மோடு இணைவார்கள். நீங்கள் எதிர்பாராத பெரிய தலைவர்கள் எல்லாம் வருவார்கள். சட்டசபை தேர்தலில் நாம் நிற்கிறோம். அடிக்கிறோம். ஜெயிக்கிறோம். நாம் தான் ஜெயிப்போம். நீங்கள் நல்லபடியாக பணியாற்றுங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். அதன்பிறகு, கட்சி பணியில் ஈடுபடுங்கள். நானும் ஏப்ரல் மாதம் சினிமாவில் நடிக்க இருக்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியதாக மாவட்ட செயலாளர்கள் வட்டாரத்தில் கூறப்பட்டது.

Next Story