டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை நிறைவு
டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தி.மு.க.வுடன் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ப. சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என கே.எஸ். அழகிரி ராகுலிடம் கேட்டு கொண்டுள்ளார். இந்த ஆலோசனை நிறைவடைந்து உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி பற்றி நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளது. இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story