கோடநாடு விவகாரம்; மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது: உயர் நீதிமன்றம்
கோடநாடு விவகாரத்தில் மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.
இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் சயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த ஜனவரி 11ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்கள். மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மனோஜ் மற்றும் சயானின் ஜாமீனை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதனை ரத்து செய்யக்கோரி மனோஜ் மற்றும் சயான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இதன்மீது இன்று நடந்த விசாரணையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட மனோஜ் மற்றும் சயானை வரும் 25ந்தேதி வரை கைது செய்ய கூடாது என கோத்தகிரி காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, அவர்களின் மனுவுக்கு பதிலளிக்க கோத்தகிரி காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story