சென்னையில் ருசிகரம் காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்து சுற்றிய மாணவர்


சென்னையில் ருசிகரம் காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்து சுற்றிய மாணவர்
x
தினத்தந்தி 20 Feb 2019 7:58 PM GMT (Updated: 20 Feb 2019 7:58 PM GMT)

சென்னையில் காதலி முத்தம் தருவதாக கூறியதால், பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்த மாணவரை, திருடன் என்று நினைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை,

சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் சக்திவேல். ஐ.டி.ஐ. மாணவரான இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சக்திவேல் மெரினா கடற்கரையில் காதலியை சந்தித்தார். அப்போது காதலியிடம் அன்பான முத்தம் ஒன்றை காதலர் தின பரிசாக கேட்டார்.

முத்தம் கொடுப்பதற்கு, சக்திவேலின் காதலி ருசிகர நிபந்தனை விதித்தார். பர்தா அணிந்து பெண் வேடம் போட்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரை நடந்து வந்தால் ஆசையாக கட்டிப்பிடித்து முத்தம் தருவதாக காதலி சொன்னார். இந்த நிபந்தனைக்கு சக்திவேல் ஒப்புக்கொண்டார்.

காதலியின் நிபந்தனையை சக்திவேல் நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை, ராயப்பேட்டையில் உள்ள தனது காதலியின் வீட்டின் அருகில் இருந்து, பர்தா அணிந்து பெண் வேடம் தரித்து சக்திவேல் மெரினா நோக்கி நடந்து சென்றார். மெரினாவில் அவரது காதலி காத்திருந்தார்.

ஐஸ்அவுஸ் பகுதியில் பர்தாவுடன் நடந்து சென்ற சக்திவேலை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்த்தனர். அவர் காலில் அணிந்து இருந்த செருப்பு அவரை ஆண் என்று அடையாளம் காட்டியது. திருடனாக இருக்கலாம் என பொதுமக்கள் நினைத்தனர்.

உடனே அவரை பிடித்த பொதுமக்கள் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தியபோது, தனது காதலியின் அன்பு முத்தத்துக்காக பர்தா அணிந்து பெண் வேடம் போட்ட ருசிகர கதையை தெரிவித்தார்.

இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அவரை எச்சரித்தனர். மேலும் அவரது காதலியையும் அழைத்து போலீசார் கண்டித்து அறிவுரை வழங்கினார்கள். பின்னர் சக்திவேல் விடுவிக்கப்பட்டார்.

Next Story