இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது


இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 8:41 PM GMT)

இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

சென்னை, 

இந்திய ரெயில்வே துறையில் தென்னக ரெயில்வே, மேற்கு ரெயில்வே உள்பட 16 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், டிக்கெட் வழங்குபவர், நிலைய அதிகாரி, சரக்கு ரெயில் பணியாளர், இளநிலை கணக்கு உதவியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர், ஈ.சி.ஜி. டெக்னீசியன், ஆய்வக கண்காணிப்பாளர், உதவியாளர், சுருக்கெழுத்தர், தலைமை சட்ட உதவியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர் (இந்தி), தண்டவாள பராமரிப்பாளர் கிரேடு-4, எலக்ட்ரிக்கல், எந்திரவியல், பொறியியல் பிரிவுகளில் உதவியாளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த மண்டலங்களின் ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் ரெயில்வே பணியாளர் தேர்வு பிரிவு (ஆர்.ஆர்.சி.) ஆகிய இணையதளங்களில் ஓரிரு நாளில் வெளியாகும் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோன்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற 24 மத்திய ஆட்சி பணிகளில் 896 பேரை தேர்வு செய்ய மத்திய நிர்வாக பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் 39 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்களில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு முதன் முறையாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான தேர்வுக்கு upsc online.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

முதற்கட்ட தேர்வு ஜூன் மாதம் 2-ந் தேதி நடக்க உள்ளது.

Next Story