சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு


சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 8:28 PM GMT)

காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசிய காட்சி. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் உள்ளனர்.

சென்னை, 

சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது கேவலமானது என்று ப.சிதம்பரம் கூறினார்.

மத்திய பா.ஜ.க. மோடி அரசின் ரபேல் ஊழலை கண்டித்தும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவான்மியூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறு, குறு தொழில் துறை உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வகையில் வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து நோட்டீசுகளை அனுப்பி கதறவைக்கின்றனர். இது தான் வரி பயங்கரவாதம்.

ஜி.எஸ்.டி. வரியை சிதைத்ததால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதாரரீதியாக இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு பின்னாக தள்ளி இருக்கிறது பா.ஜ.க. அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. இதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தாண்டியதே இல்லை. இதனால் மீண்டும் ஒருமுறை 5 ஆண்டுகள் மோடி அரசுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

பா.ஜ.க. அரசு மக்களை பிரித்தாளுகிறது. பா.ஜ.க.வுக்கு அப்பால் எந்த கட்சிகளும் சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்ளாது. சனாதன சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறார்கள். அதற்கு அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் துணைபோவது முட்டாள் தனம். சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது அதைவிட கேவலமானது.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு துணைபோகும் அ.தி.மு.க., பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சனாதன சக்திகளை எதிர்க்க கைகோர்த்து இருக்கிறோம்.

பா.ஜ.க. ஆட்சியில் மந்திரிகளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல் பிரதமரே அனைத்து அதிகாரத்தையும் வைத்து இருந்தார். ரிசர்வ் வங்கி கவர்னர்கள் 2 பேர் எந்தக்காலத்திலும் ராஜினாமா செய்தது கிடையாது.

மாணவர்கள், விவசாயிகள், குடும்ப தலைவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். நாங்கள் செய்ய முடிந்தவைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு முன்பு தந்ததுபோல 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், விஜயதரணி எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story