அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதி ஒதுக்கீடு


அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 2 March 2019 6:43 AM GMT (Updated: 2 March 2019 8:04 AM GMT)

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி இறுதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல்-சபை எம்.பி. பதவியும் அளிப்பது என முடிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே கூட்டணி பரபரப்பு தொற்றிக் கொண்டது. தொடர்ந்து பாரதீய ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு இணையான இடங்களை தே.மு.தி.க.வுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க.வோ அதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

அ.தி.மு.க. தலைமை, தே.மு.தி.க.வுக்கு 4 பாராளுமன்ற தொகுதிகளையும், ஒரு மேல்-சபை தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை விஜயகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த  நிலையில் அ.தி.மு.க  கூட்டணியில் புதிய தமிழகமும் தற்போது சேர்ந்து உள்ளது. புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று அ.தி.மு.க  தலைமை அலுவலகம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது;

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என கூறினார்.

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-

வரும் பாராளுமன்ற தேர்தலில். பா.ஜ.க -அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் போட்டியிடும் . புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் முழு ஆதரவு அளிக்கும். எங்களுக்கு சின்னம் பிரச்சினை இல்லை.  மக்களவை தேர்தலில் புதிய தமிழகம் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என கூறினார்.

Next Story