கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா; 12ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு


கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா; 12ந்தேதி உள்ளூர் விடுமுறை:  ஆட்சியர் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 March 2019 10:36 AM GMT (Updated: 7 March 2019 10:36 AM GMT)

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 12ந்தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியின் மேற்கு கடலோர பகுதியில் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உ‌ஷ பூஜையும், 8 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.

இதற்கு முன், மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.  இதன்பின் கொடியேற்றப்பட்டு பூஜைகளும் நடந்தன.

இதனை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து திருவிழாவில் கலந்து கொண்டனர்.  இதில், தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் 12ந்தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Next Story