மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு


மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு
x
தினத்தந்தி 13 March 2019 12:17 PM GMT (Updated: 13 March 2019 12:40 PM GMT)

மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாகர்கோவில் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக போகிறார். இங்கே அமைந்திருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார்.  2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும்  கைப்பாவை ஆட்சியாகும். 

 கடந்த காலத்தில் திமுக - அதிமுக போட்டியிருந்தது. இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது  மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. முன்பு மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் சிதைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்க மாட்டார்கள்.  

தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கமே உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யை தவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என கூறினார். 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன். 

எங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்று விட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. 

ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றியும், இளைஞர்கள் வேலையின்றியும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார் என்று பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.

Next Story