பாலியல் புகார் கூறிய மாணவி பெயரை வெளியிட்டதால் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை பாய்கிறது


பாலியல் புகார் கூறிய மாணவி பெயரை வெளியிட்டதால் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை பாய்கிறது
x
தினத்தந்தி 16 March 2019 10:15 PM GMT (Updated: 16 March 2019 7:49 PM GMT)

பாலியல் புகார் கூறிய மாணவியின் பெயரை வெளியிட்டதால் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் ‘பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த கல்லூரி மாணவி தொடர்பான விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு விசாணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அதிகாரியின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளி மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மன நல ஆலோசனை வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி இருந்தனர்.

இடமாற்றம்?

மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இட மாற்றம் செய்யப்படுவார் என்று உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாண்டியராஜன் இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய போது சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கி இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயர் வெளியிட்ட சர்ச்சையிலும் சிக்கி விசாரணைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வக்கீல்கள் கடிதம்

இதற்கிடையில் கோவை மாவட்ட அனைத்து வக்கீல்கள் சார்பில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் போலீஸ் சூப்பிரண்டு உள்நோக்கத்துடன் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

எனவே கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் வக்கீல்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story