நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 17 March 2019 12:15 AM GMT (Updated: 16 March 2019 9:28 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி பிரசாரம்

சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட்டது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் கமிஷன் விளக்கம் கோரி உள்ளது. பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விளக்கம் கோரப்பட்டு இருக்கிறது.

தேர்தல் பிரசாரங்களை கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் நடத்த அந்தந்த கல்வி நிறுவனங்களின் அனுமதி இருந்தாலே போதும். ஆனால், அந்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்தே தேர்தல் பிரசாரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது.

எனவே இந்த புகாருக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷிடம் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அவரது விளக்கத்துக்கு பிறகு அதில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

பறிமுதல்

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனைகளில் 15-ந் தேதி வரை, ரூ.4.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 15-ந் தேதி ஒரு நாளில் மட்டும் ரூ.73.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.28 கோடியும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.93.62 லட்சமும் பறிமுதல் ஆகி உள்ளது.

‘சிவிஜில்’ என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்வது, புகார்கள் அளிப்பது போன்றவற்றுக்காக 297 புகார்கள் பெறப்பட்டன. இந்த செயலி மூலம் தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்தால் ‘சிவிஜில்’ செயலியில் புகார் செய்யலாம். அந்த வகையில் 38 புகார்கள் பெறப்பட்டு அவை சரிசெய்யப்பட்டன. 81 விளம்பரங்கள் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கைவிடப்பட்டது.

விண்ணப்பங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட 8 லட்சம் விண்ணப்பங்களில் 66 சதவீத விண்ணப்பங்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள 2.75 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

புகார் அளிப்பதற்கான 1950 என்ற கட்டணமில்லாத போன் எண்ணுக்கு இதுவரை 44 ஆயிரத்து 240 அழைப்புகள் பெறப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

கலெக்டர்களுடன் நாளை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுடன் தலைமைச் செயலகத்தில் 18-ந் தேதி (நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படுகிறது.

எனது தலைமையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமைகள், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அம்சங்கள், தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அங்குள்ள போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய தகவல் வந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story