பொள்ளாச்சி பாலியல் சம்பவ பெண் பெயர் வெளியீடு; உள்துறை செயலாளர், கோவை எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு


பொள்ளாச்சி பாலியல் சம்பவ பெண் பெயர் வெளியீடு; உள்துறை செயலாளர், கோவை எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு
x
தினத்தந்தி 23 March 2019 10:52 AM GMT (Updated: 23 March 2019 10:52 AM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர் மற்றும் கோவை எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.  இதில் சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

இந்த கொடூர கும்பல் 200க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. 

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அ.தி.மு.க.வை சேர்ந்த பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், புகார் தெரிவித்த மாணவியின் பெயர் சமூக ஊடகங்களில் வெளியானது.  இதனால் பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியான விவகாரத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, கோவை எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனுவின் மீது வருகிற திங்கள் கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

Next Story