கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்


கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 27 March 2019 4:45 AM GMT (Updated: 27 March 2019 6:51 AM GMT)

கோவையில் நேற்று 6 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது

கோவை,

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கிவரச்சொல்லி கடைக்கு அனுப்பிவைத்தார். வெகுநேரமாகியும் சிறுமி வீடுதிரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவளது பாட்டி அந்த கடைக்கு சென்று கேட்டார். அங்கு வெற்றிலை வாங்கிவிட்டு சிறுமி சென்றுவிட்டதாக கடைக்காரர் தெரிவித்து உள்ளார். தன்னுடன் படிக்கும் சிறுமிகளின் வீடுகளுக்கு விளையாட சென்று இருக்கலாமோ என்று அவளை தேடி சென்றார். ஆனால் அங்கும் அவள் இல்லை.

இதற்கிடையே அந்த சிறுமியின் தாய் வேலையை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் பாட்டி நடந்ததை எடுத்து கூறினார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது குழந்தையை கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தேடிப்பார்த்தார். இருப்பினும் அந்த சிறுமியை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின் தாய் தடாகம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். அவர்களும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நள்ளிரவு 1 மணி வரை குழந்தையை தேடிப்பார்த்தனர். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் தோழிகளின் வீடுகளுக்கு சென்று இருக்கலாம். நேரமாகிவிட்டதால் அங்கேயே தூங்கியிருக்கலாம். எனவே காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றவாறு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில், சிறுமியின் வீடு அருகே இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சந்து பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சிறுமியின் உடல் காயங்களுடன் டி-சர்ட் மூலம் சுற்றிவைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சிறுமியின் தாய்க்கு தகவல் கிடைத்தது. பதறிப்போய் அலறியடித்து ஓடிச்சென்று அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.

பின்னர் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன், துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் சிறுமியின் உடல் கிடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து,  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


Next Story