வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் மனு


வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் மனு
x
தினத்தந்தி 2 April 2019 7:39 AM GMT (Updated: 2 April 2019 7:39 AM GMT)

வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது. இவருடைய மகன் கதிர்ஆனந்த் காட்பாடியில் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வருமானவரித்துறை அதிகாரிகள், துரைமுருகன் வீடு, அவரது மகன் நடத்தும் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்தில் சோதனை நடத்தினார்கள்.

விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதேபோல் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் குடியாத்தம் அணங்காநல்லூரைச் சேர்ந்த கே.சக்கரவர்த்தி, வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி விஜயாவின் வீட்டுக்கு சோதனை நடத்தச் சென்ற வருமான வரி அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர் உஜ்வல்குமாரும் சென்றிருந்தார்.

சோதனையின்போது பள்ளிக்குப்பத்தில் உள்ள விஜயாவின் வீட்டில் சாக்கு மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் புத்தம் புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண கட்டுகளில் வார்டு எண், வாக்குச்சாவடி, பகுதியின் பெயர் ஆகியவை எழுதப்பட்டு இருந்தன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வருமான வரி சோதனையின் போது கோடிக்கணக்கான பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

இந்த நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு எதிராக அதிமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story