மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
x
தினத்தந்தி 8 April 2019 5:29 AM GMT (Updated: 8 April 2019 5:29 AM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

வரும் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் 8.24-க்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 16-ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17-ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெறுகிறது. 18-ம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டமும், 19-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா தரிசன முறையில் 3,200 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் ரூ.200, ரூ.500 கட்டணத்தில் கோயில் இணையதளம் மூலம் இன்று (ஏப்.8) முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் செய்து வருகின்றனர்.

திருவிழாவின்போதே மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 2 ஐ.ஜி.க்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story