நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டுமா? பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டுமா? பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 10 April 2019 11:30 PM GMT (Updated: 10 April 2019 7:29 PM GMT)

நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.

பெரம்பலூர், 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோவையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இரவு சேலத்தில் தங்கினார்.

நேற்று காலை சேலத்தில் இருந்து முசிறி வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பொதுமக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நதிகள் இணைப்பு திட்டம்

நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் மத்தியில் நல்ல ஆட்சி அமைந்து, திறமையான பிரதமர் நாட்டை ஆள வேண்டும். நம் நாட்டிற்கு தகுதியான, திறமையான பிரதமரான மோடி மீண்டும் வரவேண்டும்.

நாமெல்லாம் விவசாயிகள். நான் இன்னமும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகள் கஷ்டம், இன்னல்கள் ஸ்டாலினுக்கு தெரியாது. கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் வர உள்ளது. நாடாளுமன்றத்தில் முதல் குரல் இதற்கு தான். கோதாவரி நீரை கொண்டு வந்தால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும்.

இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையிலும் இதனை குறிப்பிட்டுள்ளனர். எங்கள் ஆட்சியின் முதல் கோரிக்கை தண்ணீருக்காக தான்.

ரூ.2 ஆயிரம் நிதி உதவி

கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டதும், மோட்டார் மூலம் ஏரி குளங்களுக்கு நீர் எடுத்து செல்லப்படும். இதற்காக திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. நாங்கள் செய்வதை தான் சொல்வோம். ஸ்டாலின் போல சொல்லிவிட்டு செல்ல மாட்டோம்.

தை பொங்கல் பரிசு ரூ.1,000 கொடுத்தோம். அதை ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார். ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்க நினைத்தார். அவர் மக்களுக்கு நன்மை அளிக்க கட்சி நடத்தவில்லை. தற்போது தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிவித்தேன். அதை ஸ்டாலின் தடை செய்ய முயற்சி செய்தார். ஆனால் கோர்ட்டு தடை வழங்க மறுத்துள்ளது. வழக்கினையும் தள்ளுபடி செய்தது.

ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன்

தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, கட்சி பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்காக அரசின் சார்பில் வழங்கக்கூடிய நலத்திட்டங்களை தடுப்பதுதான் தி.மு.க.வின் வேலையாக இருக்கிறது. பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டுமா?

மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க உள்ளது. முசிறி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சாதனைகளை கூறியும், செய்ய உள்ளதையும் கூறி ஓட்டு கேட்கிறோம். ஆனால் ஸ்டாலின் ஆளும் கட்சியினரையும், பிரதமரையும் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

ஸ்டாலினின் சவ்வு கிழிந்துவிடும்

ஸ்டாலின் விவசாயத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அவருக்கு விவசாயம் குறித்து தெரியாது. மண்புழு பற்றி ஸ்டாலின் பேசுகிறார். மண்புழுவின் நன்மை தெரியாமல் முதல்-அமைச்சரை மண்புழு என்கிறார். மண்புழு விவசாயியின் நண்பன். ஒரு முதல்-அமைச்சரை, விவசாயி குடும்பத்தில் வந்தவரை விமர்சனம் செய்கிறார். நான் யாரையும் விமர்சனம் செய்வதில்லை.

9 முறை தேர்தலில் போட்டியிட்டு 6 முறை எம்.எல்.ஏ., 3 முறை எம்பி.யாக இருந்தவன். எவ்வளவு தான் பொறுமை காக்க முடியும். கோவையில் பேசிய ஸ்டாலின், முதல்-அமைச்சரான என்னை கேடி என்கிறார். யாரையாவது அவ்வாறு பேசினால் விடுவார்களா?. இனி இவ்வாறு பேசினால் ஸ்டாலினின் சவ்வு கிழிந்துவிடும்.

பதில் கொடுப்போம்

நான் கிராமத்தில் இருந்து படிப்படியாக முதல்-அமைச்சராக வந்தவன். நான் வந்த வழி வேறு. ஸ்டாலின் வந்த வழி வேறு. கஷ்டம் என்றால் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியுமா?. நாகரிகமாக பேசினால் அதற்கேற்றதுபோல் நாமும் பதிலளிப்போம். நாகரிகம் தவறி பேசினால் அதற்கு தகுந்த பதில் எங்களால் கொடுக்க முடியும். மரியாதை கொடுத்தால் மரியாதை, இல்லையென்றால் அதற்கேற்ப பதில் கொடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

துறையூர்

பின்னர் அவர் துறையூர் பாலக்கரையில் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கலைஞர் இறந்தபோது அரசு 6 அடி நிலம் கூட தமிழக அரசு ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் மெரினாவில் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் அங்கு இடம் தர இயலவில்லை. ஆனால் அதற்கு மாற்றாக அண்ணா பல்கலைக்கழகம் எதிரே ரூ.300 கோடி மதிப்பில் 2 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. அதனை ஏற்க மறுத்து கோர்ட்டுக்கு சென்றனர்.

ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்

இதேபோல் காமராஜர் இறந்தபோது, அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த பாலசுப்பிரமணியன், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இடம் கேட்டார். ஆனால் காமராஜர் முதல்-அமைச்சராக இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் தானே என்று மறுத்தார்.

அப்படி பார்த்தால் கருணாநிதியும் முன்னாள் முதல்-அமைச்சர் தானே. அவர்களுக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?. கருணாநிதியை அடக்கம் செய்ய 6 அடி நிலம் கூட தரவில்லை என்று ஸ்டாலின் கூறுவது பச்சை பொய். தவறான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை குழப்பி பொய் பிரசாரம் செய்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார். அது நடக்காது.

இவ்வாறு முதல்வர் துறையூரில் பேசினார்.

பின்னர் மாலையில் தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். இதை முடித்துவிட்டு கடலூர் தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story