‘நீட்’ தேர்வை திணிக்கும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்


‘நீட்’ தேர்வை திணிக்கும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 April 2019 9:15 PM GMT (Updated: 15 April 2019 8:52 PM GMT)

‘நீட்’ தேர்வை திணிக்கும் செயலில் ஈடுபடும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி என 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடியை பார்த்து படித்த பட்டதாரிகள் கேட்கிறார்கள். நரேந்திர மோடியே வேலைவாய்ப்பு எங்கே? கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், விளை பொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கியது. ஆனால் விவசாயிகளின் விளை பொருளுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாகவே சந்தையில் விற்கப்படுகிறது.

இந்திய மக்கள் மீது 2016 நவம்பர் 8 அன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பினால் எந்த பலனும் ஏற்படவில்லை. அப்பாவி மக்கள் 140 பேர் உயிரை இழந்தனர். 35 லட்சம் வேலைகள் பறிபோயின. ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது நரேந்திர மோடியால் நாட்டிற்கு ஏற்பட்ட பேரழிவாகும்.

நரேந்திர மோடி ஆட்சியில் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் ரூ.53 ஆயிரம் கோடி ஏமாற்றிய 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பித்துப்போகவும் அனுமதிக்கப்பட்டனர். மோடியின் நண்பர்களான குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல்சோக்சி ஆகியோர் ரூ.26 ஆயிரம் கோடி வங்கியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டார்கள்.

காங்கிரஸ் ஆட்சி பதவி விலகியபோது 2014-ம் ஆண்டு வாராக்கடன் ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் கோடி. ஆனால் ஜனவரி 2019-ல் மோடி ஆட்சியில் வாராக்கடன் ரூ.13 லட்சம் கோடி. வங்கிப் பணம் என்பது மக்கள் பணம். மக்கள் பணத்தை ஒரு சில முதலாளிகள் கொள்ளையடிப்பதை தடுக்காத நரேந்திர மோடியை ஊழல் பேர்வழி என்று அழைக்காமல், வேறு எப்படி அழைப்பது? பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதன்மை இடத்தில் இருப்பது ரபேல் விமான கொள்முதல் ஊழல். ரபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்கக்கூடும் என்று தகவல் கசிந்ததும் அதன் இயக்குனர் அலோக் வர்மாவை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்தது ஏன்? இதன்மூலம் சி.பி.ஐ.யின் தனித்தன்மையை சிதைத்து மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றார். ஆனால் உச்சநீதிமன்றம் மறு ஆய்வு மனுவை விசாரிக்க முற்பட்டதனால் இவரை எவராலும் காப்பாற்ற முடியாது.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நரேந்திர மோடி ஆட்சியில் அரசமைப்பால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும் செயல்பட முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன. பா.ஜ.க. ‘நீட்’ தேர்வை திணிக்கிறது. காங்கிரஸ் கட்சி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறது. ‘நீட்’ தேர்வை தமிழகத்தின் மீது திணித்து அனிதா போன்ற மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

தமிழக வாக்காளர்கள் மத்திய அரசினால் பாதிக்கப்பட்டதோடு, மாநிலத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சியாலும் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவுகட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று முன்மொழிந்து இருக்கிறார். அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டிருக்கிறார். இதனடிப்படையில் தமிழக வாக்காளர்கள் வாக்களித்து மக்கள் நலன்சார்ந்த, வளர்ச்சியில் அக்கறையுள்ள ஆட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் அமையும் என்ற நம்பிக்கையோடு உங்களது ஆதரவை அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story