மசாஜ் கிளப் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் போலீஸ் உதவி கமிஷனர் அதிரடி கைது


மசாஜ் கிளப் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் போலீஸ் உதவி கமிஷனர் அதிரடி கைது
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 10:16 PM GMT)

சென்னையில் மசாஜ் கிளப் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, போலீஸ் உதவி கமிஷனரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை அசோக்நகர் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றியவர் வின்சென்ட் ஜெயராஜ் (வயது 57). கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர் இங்கு பணியாற்றி வந்தார். இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் கூறப்பட்டது. அசோக்நகர் 4-வது அவென்யூவில் செந்தில்குமரன் (37) என்பவர், மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறார். அந்த மனமகிழ் மன்றத்தில் உரிய அனுமதியுடன் மசாஜ் கிளப்பும் செயல்படுகிறது.

அந்த மசாஜ் கிளப்பை தொடர்ந்து நடத்துவதற்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் மீது, மசாஜ் கிளப் உரிமையாளர் செந்தில்குமரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் ரகசிய புகார் கொடுத்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரகுருபரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். வின்சென்ட் ஜெயராஜை மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தனர்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் அசோக்நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்த நிலையில் இருந்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்பேரில் மசாஜ் கிளப் உரிமையாளர் செந்தில்குமரன் லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரத்தை அவரிடம் நேரிடையாக கொடுத்ததாக தெரிகிறது.

அப்போது மாறுவேடத்தில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குமரகுருபரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வின்சென்ட் ஜெயராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

வின்சென்ட் ஜெயராஜ் சென்னை பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். தீவிர விசாரணைக்குப்பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக வின்சென்ட் ஜெயராஜ் பணியில் சேர்ந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றியுள்ளார். ஓய்வுபெற இருந்த நிலையில் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story