கரூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பயங்கர மோதல் வாகனங்கள் உடைப்பு; கல்வீச்சில் போலீஸ்காரர் காயம்


கரூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பயங்கர மோதல் வாகனங்கள் உடைப்பு; கல்வீச்சில் போலீஸ்காரர் காயம்
x
தினத்தந்தி 16 April 2019 11:16 PM GMT (Updated: 16 April 2019 11:16 PM GMT)

கரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே பயங்கரமாக மோதல் ஏற்பட்டது. அப்போது பிரசார வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சில் போலீஸ்காரர் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.

கரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. மேலும் நேற்று மாலையே நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட, அத்தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கரூரில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுடைய இறுதிக்கட்ட பிரசாரத்தை கரூர் மனோகரா கார்னரில் மேற்கொள்வது என்று சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்து, அதற்கான அனுமதி கேட்டனர். இந்நிலையில் அந்த இடத்தில் யாரும் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது என்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரி அன்பழகன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா பஸ் நிலைய நுழைவு வாயில் மற்றும் கோவை ரோடு ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கரூர் மாவட்ட போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் பதிவுகள் ரகசிய இடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டன.

மேலும் கரூர் பஸ் நிலைய பகுதியில் யாரும் நுழைய முடியாத வகையில் போலீசார் தங்களுடைய பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம், புலியூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரங்களை மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நேற்று மதியம் 3.15 மணியளவில் கரூர் வெங்கமேடு சேலம் மெயின்ரோட்டில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஆதரவாக திருச்சி சிவா எம்.பி., நாஞ்சில் சம்பத், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கு பேசி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து மாவட்ட செயலாளரும், போக்கு வரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க.வினர், வேட்பாளர் தம்பிதுரையை அழைத்து கொண்டு ஊர்வலமாக கரூர் நோக்கி வந்தனர். அப்போது இடையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினர் நின்று கொண்டிருந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் எதிரெதிரே நின்ற அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணியினர் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த வார்த்தை மோதல் முற்றியதில், அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கம்பு, கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். பின்னர் கீழே கிடந்த கற்களை எடுத்து சிலர் வீசினர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.

கல்வீச்சில் அங்கு நின்ற உளவுப்பிரிவு போலீஸ்காரர் செந்திலுக்கு தலையில் கல் பட்டதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சிலர் காயம் அடைந்தனர். இந்நிலையில் அங்கு நின்ற தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் பிரசார வேன், அ.தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். இதற்கிடையே ஊர்வலத்தில் இறுதியாக வந்த வாகனங்களை வழிமறித்து தி.மு.க. உள்பட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க. வாகனங்கள் மீது அவர்கள் கல்வீசினர். பின்னர், சிலர் அங்கிருந்த அ.தி.மு.க. பிரசார பஸ் ஒன்றை கம்பி, கட்டையால் அடித்து நொறுக்கினர். 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Next Story