தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:30 PM GMT (Updated: 16 April 2019 11:31 PM GMT)

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை திருவாரூரில் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவாரூர் தேரை கருணாநிதி தான் மீண்டும் ஓட நடவடிக்கை எடுத்தார். நான் இந்த திருவாரூரில் இருந்து எனது பிரசாரத்தை தொடங்கினேன். தற்போது அதே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்வதற்காக வந்துள்ளேன்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். நாளை நமதே, நாற்பதும் நமதே. நான் சென்ற இடத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் எழுச்சி, ஆர்வத்துடன் உள்ளனர். இதேபோல் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மே 19-ந் தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் என 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். அந்த வெற்றியில் திருவாரூருக்கும் பங்கு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியை வெற்றி பெற செய்தீர்கள். இது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதற்கு முடிவு எடுக்கும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதை பற்றி பேசினால் ஸ்டாலின் இப்போது இதை பேசலாமா? என கேட்கிறார்கள். நான் எதிர்க் கட்சி தலைவர். மறைந்தவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அதனால் எனக்கு பேச தகுதி உள்ளது.

கோடநாடு பிரச்சினை குறித்து பேசக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் நான் பேசவில்லை. அது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அடுத்து பொள்ளாச்சி பிரச்சினை. 200-க்கும் மேற்பட்ட பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து பணத்தை பறித்துள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரின் மகன்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வெளியானது.

இந்த 3 பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியும் இதுவரை அவர்கள் பதில் கூறவில்லை. தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக இந்த 3 பிரச்சினை குறித்தும் உரிய விசாரணை முழுமையாக நடத்தி சம்பந்தப்பட்டவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி அவர்களை கைது செய்வது தான் என்னுடைய வேலை.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதை சொல்லி உள்ளோம். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கான வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story