தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 11:39 PM GMT (Updated: 16 April 2019 11:39 PM GMT)

தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை நடத்திய சோதனையில் 1,022 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

வேலூரில் நடந்த வருமான வரித்துறை சோதனை தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்து விட்டேன். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக 5 முறை என்னிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டது. வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை, வருமான வரித்துறையின் அறிக்கை, எப்.ஐ.ஆர். ஆகியவையும், எனது அறிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை தேர்தல் நடவடிக்கையாக தமிழகத்தில் ரூ.135.41 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 15-ந்தேதி மட்டும் ரூ.2.50 கோடி கைப்பற்றப்பட்டு இருக்கிறது. கோவையில் அதிகபட்சமாக ரூ.1.38 கோடி பிடிபட்டது. தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை மட்டும் ரூ.56.55 கோடி கைப்பற்றியுள்ளனர்.

பி.எஸ்.கே. பொறியியல் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.14.17 கோடி சிக்கியுள்ளது. எம்.எல்.ஏ. விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அங்கு வசிப்பவருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதுபோல ரூ.37.42 லட்சம் மதிப்புள்ள மது வகைகளும், ரூ.37.68 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. 1,022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி உள்பட ரூ.294.38 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

15-ந்தேதி சென்னையை அடுத்த இரும்புலியூரில் 23 கிலோ தங்கம் சிக்கியது. அதோடு, ரூ.8.15 கோடி மதிப்புள்ள மடிக்கணினி, குக்கர், சேலை, துணி வகைகள் சேர்த்து மொத்தம் ரூ.438.70 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 2 ஆயிரத்து 490 புகார்கள் பெறப்பட்டு, 1,127 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 4 ஆயிரத்து 525 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களான சேலம் வாக்குப்பதிவு அதிகாரி வி.நித்யா, சேலம் தொடர்பு அதிகாரி எஸ்.ரமேஷ், திருப்பூர் தபால் வாக்குச்சீட்டு அலுவலர் எஸ்.செந்தில்குமார், வாக்குப்பதிவு அதிகாரி எம்.திலகமாதா ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். தஞ்சாவூர் பறக்கும் படையில் வீடியோ படப்பிடிப்பாளராக இருக்கும் ஆர்.ராஜ்கமல் காயமடைந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story