6-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி


6-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி
x
தினத்தந்தி 19 April 2019 7:37 AM GMT (Updated: 19 April 2019 7:37 AM GMT)

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை:

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

அவரது 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தினத்தந்தி, தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story