பணி நேரம் முடிந்ததாக கூறி சரக்கு ரெயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இயக்கினார்


பணி நேரம் முடிந்ததாக கூறி சரக்கு ரெயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இயக்கினார்
x
தினத்தந்தி 19 April 2019 8:53 PM GMT (Updated: 19 April 2019 8:53 PM GMT)

பணி நேரம் முடிந்ததாக கூறி சரக்கு ரெயிலை டிரைவர், நடுவழியில் நிறுத்தினார். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் அவர் தொடர்ந்து ரெயிலை இயக்கினார்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையம் உள்ளது. நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு காரைக்கால் துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் தினமும் இந்த ரெயில் நிலையத்தை கடந்து செல்லும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு காரைக்கால் சென்ற சரக்கு ரெயில் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில் நிலைய அதிகாரி, சிக்னல் சரியாக இருந்தும் சரக்கு ரெயில் ஏன் நிறுத்தப்பட்டது? என்று ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் கேட்டார்.

அதற்கு அவர், 12 மணி நேரம்தான் நான் பணி செய்ய வேண்டும். ஆனால் ரெயிலை 12 மணி நேரம் 15 நிமிடம் இயக்கிவிட்டேன். இனி 1 நிமிடம் கூட என்னால் ரெயிலை இயக்க முடியாது. வேறு டிரைவர் வைத்து ரெயிலை இயக்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதற்கு ரெயில் நிலைய அதிகாரி, டிரைவர் முத்துராஜாவிடம் அடுத்துள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையம் வரை ரெயிலை இயக்குங்கள். அங்கிருந்து வேறு டிரைவர், ரெயிலை இயக்கி கொள்வார். இன்னும் 10 நிமிடம் சரக்கு ரெயிலை இயக்குங்கள் என்று கூறினார். அதற்கு முத்துராஜா ஒப்புக்கொள்ளவில்லை.

அந்த சரக்கு ரெயிலில் பெட்டிகள் அதிகம் என்பதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை தாண்டி 100 மீட்டர் வரை நின்றது. இதனால் ரெயில்வே கேட் திறந்து இருந்தும் சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை வரை ரெயிலை இயக்கினார். வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் 2 மணி நேரம் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது.

மேலும், அந்த வழியாக திருப்பதியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்திலும், மேலும் சில ரெயில்கள் நடுவழியிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story