குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப்போட்டு தற்கொலை


குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 April 2019 11:11 PM GMT (Updated: 20 April 2019 11:11 PM GMT)

குடியாத்தம் அருகே குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால், மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒலக்காசி ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 42). இவரது மனைவி கனிமொழி (37). கனிமொழி நெசவு தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

மதிவாணன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மதிவாணன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரம் அடைந்த மதிவாணன் கனிமொழி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பேரணாம்பட்டு அருகே உள்ள சுடுகாடு பகுதியில் புளியமரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் மதிவாணன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story