பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு


பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 21 April 2019 11:26 PM GMT (Updated: 21 April 2019 11:28 PM GMT)

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூரை சேர்ந்தவர் மாணிக்கவேல் (வயது 42). இவருடைய மனைவி ஜெய்ஹிந்த்தேவி (39). இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு அபிதா(12), அட்சயா(6) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

போலீஸ் வேலைக்கு வருவதற்கு முன்பு ஜெய்ஹிந்த்தேவி திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்தார். அப்போது இவரும், அங்கு பணிபுரிந்து வந்த சிங்கனூரை சேர்ந்த மாணிக்கவேலு என்பவரும் காதலித்து வந்தனர்.

பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு போலீஸ் தேர்வில் ஜெய்ஹிந்த்தேவி வெற்றி பெற்று கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். இதையடுத்து ஜெய்ஹிந்த்தேவியும், மாணிக்கவேலுவும் திருமணம் செய்து கொண்டு, திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

தற்போது ஜெய்ஹிந்த்தேவி பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மாணிக்கவேலுவுக்கும், ஜெய்ஹிந்த்தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்ததும் ஜெய்ஹிந்த்தேவி, நெய்வேலியில் இருந்து திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த ஜெய்ஹிந்த்தேவி தனது படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். நேற்று காலை 7 மணி ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மாணிக்கவேல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, புடவையால் தூக்குப்போட்ட நிலையில் ஜெய்ஹிந்த்தேவி பிணமாக தொங்கினார். இதில் பதறிய அவர், தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெய்ஹிந்த்தேவி கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து ஜெய்ஹிந்த்தேவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story