காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: தேடப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு


காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: தேடப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 7:31 PM GMT)

பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். அதில் தேடப்பட்ட சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 43), போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜோதிமணி (40). இவர்களுக்கு தாரகேஷ் (12), தீபகேஷ் (12) என 2 மகன்கள் இருந்தனர்.

சேலம் அன்னதானப்பட்டியில் வசித்து வந்த கார்த்திக் மனைவி தேவிஸ்ரீ (32). இவர்களுக்கு ஹஸ்விகா (8) என்ற மகள் இருந்தாள். ஜோதிமணியும், தேவிஸ்ரீயும் தோழிகள் ஆவார்கள். நேற்று முன்தினம் தேவிஸ்ரீ, அவரது மகள் ஹஸ்விகா, சரவணன், ஜோதிமணி, அவரது 2 மகன்கள் மற்றும் சரவணனின் அண்ணன் மகன் ரோகித் ஆகியோர் பொத்தனூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

6 பேர் பலி

காவிரி ஆற்றில் சரவணன் உள்பட 6 பேரும் குளித்துக்கொண்டு இருந்தபோது, தாரகேஷ், தீபகேஷ் மற்றும் ஹஸ்விகா ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்ற சரவணன், ஜோதிமணி, தேவிஸ்ரீ ஆகியோரும் சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ரோகித் கரையில் நின்று உடைமைகளை பார்த்து கொண்டிருந்ததால் அவன் உயிர் பிழைத்தான்.

இதுகுறித்த தகவலின் பேரில் பரமத்திவேலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இறங்கி சரவணன் உள்பட 5 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும், சிறுமி ஹஸ்விகா உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணிவரை தேடினர். ஆனால் இருட்டிவிட்டதால் சிறுமியின் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

சிறுமி உடல் மீட்பு

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி முதல் தீயணைப்பு துறையினர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் சிறுமி ஹஸ்விகாவின் உடலை தேடினர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காலை 11 மணியளவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story