போதை மருந்து கொடுத்து சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் நண்பருடன் தலைமறைவு


போதை மருந்து கொடுத்து சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் நண்பருடன் தலைமறைவு
x
தினத்தந்தி 25 April 2019 10:00 PM GMT (Updated: 25 April 2019 8:30 PM GMT)

காஞ்சீபுரம் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் நண்பருடன் தலைமறைவாகி விட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் நண்பருடன் தலைமறைவாகி விட்டார். இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்த தம்பதி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் மனு ஒன்று கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வீட்டு வேலைக்கு...

எங்கள் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் மற்றும் அவரது தோழி வேளாங்கண்ணி ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் 16 வயது மகளை சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.

ஆனால் நாங்கள் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியாது எனக்கூறி விட்டோம். மீண்டும் சில நாட்கள் கழித்து வந்த அவர்கள் வீட்டு வேலைக்கு மகளை அனுப்புமாறும், வேலை பிடிக்கவில்லை என்றால் அவளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர். இதனை நம்பி நாங்கள் எங்களது மகளை அனுப்பி வைத்தோம்.

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட எங்கள் மகளை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டோம். இதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி எங்களது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். பின்னர் சில நாட்கள் கழித்து எனது மகளை அழைத்து செல்ல அற்புதராஜூம், வேளாங்கண்ணியும் வந்தனர்.

ஆனால் எங்கள் மகள் அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று அழுதபடி கூறினாள். இதுபற்றி மகளிடம் கேட்டபோது, வேளாங் கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை சென்னை, செங்கல்பட்டு, வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வைத்தனர். அதனை செல்போனிலும் விடியோ எடுத்து உள்ளனர். அதனை காண்பித்து எனது மகளை மிரட்டினர்.

இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் ஆபாச வீடியோவை வெளியிடுவதோடு பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்று தெரிவித்தாள். மகளுக்கு அற்புதராஜ் போதை மருந்து கொடுத்து சுயநினைவு இழக்க செய்து இரவு பகல் பாராமல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அற்புதராஜ் மற்றும் வேளாங் கண்ணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைமறைவு

புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து காஞ்சீபுரம் பெருநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அற்புதராஜையும், வேளாங்கண்ணியையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் இருவரையும் தேடி வருகிறார்கள்.

சிறுமியை அற்புதராஜூம், வேளாங்கண்ணியும் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி பலருக்கு பாலியல் விருந்து படைத்து உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் பல நாட்கள் சிறுமியை தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதில் அற்புதராஜ், வேளாங்கண்ணியுடன் சேர்ந்து ஒரு கும்பலே ஈடுபட்டு உள்ளது. போலீசார் தேடுவதால் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அற்புதராஜூம், வேளாங்கண்ணியும் பிடிபட்டால் தான் சிறுமியை சீரழித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவரும்.

3-வது சம்பவம்

காஞ்சீபுரத்தில் சமீபத்தில் சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல கடந்த சில தினங்களுக்குமுன்பு சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாக ஓட்டல் தொழிலாளி பிடிபட்டார். தற்போது வீட்டுவேலைக்கு அழைத்து சென்று போதை மருந்து கொடுத்து சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story