பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வழக்கை வாபஸ் பெறக்கோரி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் 3 பேர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வழக்கை வாபஸ் பெறக்கோரி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் 3 பேர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது
x
தினத்தந்தி 28 April 2019 10:00 PM GMT (Updated: 28 April 2019 7:47 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் வழக்கை வாபஸ்பெறக்கோரி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து 3 பேர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவை, 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கிலும் 5 பேர் கைதானார்கள். அதில் 4 பேர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் பாதிக்கப்பட்ட பல இளம்பெண்களும் புகார் செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. தன் வசம் எடுத்து உள்ளது.

வலைதளத்தில் பரவும் ஆடியோ

இந்த நிலையில் புகார் செய்த ஒரு இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசும் 3 பேர், வழக்கை வாபஸ் பெறக்கோரியும், அவ்வாறு செய்ய வில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு ஆடியோவில் பேசும் நபர், நான் பொள்ளாச்சியில் இருந்து பேசுகிறேன், நீ கொடுத்த புகாரை ஏன் இன்னும் வாபஸ் பெறவில்லை, சொன்னால் கேட்க மாட்டாயா? நான் இனி உன்னிடம் கெஞ்ச மாட்டேன், வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் முதலில் உனது கணவரை தூக்குவேன், அதன் பின்னர் உன்னையும், உனது குடும்பத்தையும் தூக்குவேன் என்று மிரட்டுகிறார். இவ்வாறு அந்த ஆடியோவில் 4 நிமிடங்கள் அந்த நபர் பேசுகிறார்.

கொலை மிரட்டல்

அடுத்த ஆடியோவில் பேசும் நபர், ஏன் நீ நாங்கள் சொல்லுவதை கேட்க மறுக்கிறாய்?. நீ பதிவு செய்த வீடியோவையும், நீ கொடுத்த வழக்கையும் வாபஸ் பெற்றுவிடு. இல்லை என்றால் வெளிநாட்டில் இருக்கும் உனது கணவர் வீடு திரும்ப முடியாது. உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்.

மற்றொரு ஆடியோவில் பேசும் நபர், போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் எங்களுக்குதான் துணையாக இருக்கிறார்கள். நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் அந்த புகாரின் நகல் எங்களிடமே வந்து விடும். நீ உடனடியாக வழக்கை வாபஸ் பெற்று விடு. நீ பொள்ளாச்சி வந்திருக்கும் போதே உன்னை கொன்று இருக்க வேண்டும். எப்படியோ தப்பித்து விட்டாய் என்று கூறுகிறார். அதற்கு அந்த இளம்பெண் வழக்கை வாபஸ் பெற முடியாது நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று கூறுகிறார்.

தீவிர விசாரணை

இவ்வாறு 3 பேர், புகார் கொடுத்த இளம்பெண்ணை மிரட்டும் ஆடியோவில் சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் அந்த 3 பேர் குறிப்பிட்டு உள்ளனர். எனவே இந்த ஆடியோ உண்மையானதா? அல்லது வேண்டும் என்றே இதுபோன்று பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார்களா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்து உள்ளதால், அவர்கள் இந்த ஆடியோவையும் வைத்து தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Next Story