எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: தேர்ச்சி விகிதம் 95.2%, திருப்பூர் மாவட்டம் முதலிடம்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: தேர்ச்சி விகிதம் 95.2%, திருப்பூர் மாவட்டம் முதலிடம்
x
தினத்தந்தி 29 April 2019 4:05 AM GMT (Updated: 29 April 2019 4:08 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது. ஒட்டு மொத்தமாக தேர்ச்சி விகிதம் 95.2 சதவிகிதமாக உள்ளது.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.  இன்று காலை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.

95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி

இதில், 95.2 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும்,மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

98.53  % தேர்ச்சி விகிதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 1,140 பேர் எழுதினார்கள். இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story