அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி முதல் தொடங்குகிறது வெயில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம்


அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி முதல் தொடங்குகிறது வெயில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 29 April 2019 10:46 PM GMT (Updated: 29 April 2019 10:46 PM GMT)

அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி இப்போதே மக்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் ‘பானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘பானி’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உப்புச்சத்து மற்றும் நீர் சத்து குறைவு ஏற்படும். அதிக அளவில் தாகம், உடல் சோர்வு, தலைவலி, தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதிக அளவில் தண்ணீர் அருந்துவதோடு, நுங்கு, பதனீர், இளநீர், மோர், தர்பூசணி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Next Story