சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்


சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 1 May 2019 5:01 PM GMT (Updated: 1 May 2019 5:01 PM GMT)

சென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 7 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களில் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை பாதித்தது.

இவர்களது பிரச்னையை தீர்க்கும் பொருட்டு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மேலும் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. அதேசமயம் மெட்ரோ ரயில் சேவையினை திட்டமிட்டு நிறுத்தியதாக, மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இன்று மாலை மீண்டும்  நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


Next Story