தமிழகத்தில், 19 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெயில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது


தமிழகத்தில், 19 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெயில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
x
தினத்தந்தி 3 May 2019 4:47 AM GMT (Updated: 3 May 2019 4:53 AM GMT)

தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக, 44.3 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையிலும், 10 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை, நேற்று பதிவானது.

நாடு முழுவதும், கோடை வெயில் கொளுத்துகிறது. தமிழகத்திலும், இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும், 10 நாட்களாக, தமிழகம் முழுவதும் பல இடங்களில், வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், 22ல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 'போனி' புயலாக மாறியது. இந்த புயலின் சுழற்சி காரணமாக, கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று, முழுவதுமாக புயலால் உறிஞ்சப்பட்டு, நிலப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும், அவ்வப்போது, இடி, மின்னலுடன் திடீர் வெப்ப சலன மழை பெய்கிறது.

தமிழக கடற்பகுதியை, 10 நாட்களாக மிரட்டி வந்த, போனி புயல், இன்று ஒடிசாவில் கரை கடக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக அதிதீவிர பலம் பெற்றுள்ள இந்த புயல், ஒடிசாவின் குடியிருப்பு பகுதிகளை விட்டு வைக்குமா என, அம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தமிழக எல்லையை புயல் தாண்டியதால், ஓரளவு கடற்காற்று வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் அளவுக்கு அதிகமான வறண்ட வானிலையே நிலவியது.பல இடங்களில் வெயில் மற்றும் உஷ்ணத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில், ஏப்ரல், மே மாத வெயிலின் அளவு, 19 ஆண்டுகளுக்கு பின், உச்சபட்சமாக பதிவானது. வேலுாரில், 44.3 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மே முதல் வாரத்தில், இதுவரை வேலூரில் அதிகபட்சமாக, 44.4 டிகிரி செல்ஷியஸ் வெயில், 2000ம் ஆண்டில் பதிவானது. அதன்பின், நேற்று அதே அளவு வெயில் பதிவாகியுள்ளது.

அதேபோல, திருத்தணியிலும், 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னையில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நுங்கம்பாக்கத்தில், 41.5, மீனம்பாக்கத்தில், 41.6 என, பதிவானது. 1908ம் ஆண்டு, 42.8 டிகிரி செல்ஷியஸ் பதிவானதே, இதுவரையிலும் உள்ள அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.

கடலூர், காரைக்கால், கரூர் பரமத்தி, பரங்கிபேட்டை, நாகை, 40; மதுரை, திருச்சி, 41; புதுச்சேரி, 39; நாமக்கல், சேலம், துாத்துக்குடி, 38; தொண்டி, 37; பாம்பன், 36; வால்பாறை, 28; கொடைக்கானல், 23 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.வரும், 5ம் தேதி வரை வறண்ட வானிலை மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. இதில் வேலூர், திருத்தணியில் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. திருச்சி, சென்னை, மதுரையில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி உள்பட முக்கிய நகரங்களில் நேற்று பிற்பகலுக்கு மேல் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

Next Story