வீட்டுக்குள் புகுந்து டி.வி. நடிகையை திருமணம் செய்து வைக்கும்படி என்ஜினீயர் வாக்குவாதம்


வீட்டுக்குள் புகுந்து டி.வி. நடிகையை திருமணம் செய்து வைக்கும்படி என்ஜினீயர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 May 2019 10:00 PM GMT (Updated: 9 May 2019 7:12 PM GMT)

சென்னை வடபழனியில், டி.வி. நடிகை வீட்டுக்குள் புகுந்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட என்ஜினீயரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை வடபழனியில், டி.வி. நடிகை வீட்டுக்குள் புகுந்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட என்ஜினீயரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

டி.வி. நடிகை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல டி.வி. தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று காலை வாலிபர் ஒருவர், ரித்திகா வீட்டின் ‘காலிங் பெல்லை’ அடிப்பதும், கதவை தட்டுவதுமாக இருந்தார். அப்போது வீட்டில் நடிகை ரித்திகா இல்லை. அவருடைய தந்தை சுப்பிரமணிதான் கதவை திறந்தார்.

திருமணம்

அந்த வாலிபர், “நான், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். உங்கள் மகள் ரித்திகாவை எனக்கு மிகவும் பிடிக்கும். டி.வி. சீரியலில் பார்த்து அவரை நான் காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” என கேட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, அந்த வாலிபரை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அதற்கு மறுத்த அவர், சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் கேட்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியே வந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போலீசார், உடனடியாக அங்கு வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில் அவர், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் (வயது 22) என்பது தெரிந்தது. என்ஜினீயரான இவர் நேற்று கோவா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். ஆனால் விமானத்தை தவறவிட்ட அவர், நடிகை ரித்திகாவின் முகவரியை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி கூறி நடிகையின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

எச்சரித்து அனுப்பினர்

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீஸ் நிலையம் வந்த அவர்கள், தங்கள் மகன் அடிக்கடி மன அழுத்தத்தால் இதுபோன்ற செயல்களை செய்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி நடிகை தரப்பில் இருந்து புகார் எதுவும் செய்யப்படாததாலும், அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், பரத்தின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பிவைத்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story