ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழப்பு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழப்பு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 May 2019 10:14 PM GMT (Updated: 10 May 2019 10:14 PM GMT)

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாயும், சேயும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு கபிலன் (8) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் 2-வதாக லட்சுமி கர்ப்பம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமியை பிரசவத்துக்காக உச்சிப்புளி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பிரசவ தேதி முடிந்தும் வலி ஏற்படாததாலும், உடல் பலகீனமாக இருந்ததாலும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவ வலி வருவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் வலி வரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறக்க வைக்க டாக்டர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு லட்சுமியும், வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து டாக்டர்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

டாக்டர்களின் அலட்சியத்தால்தான் தாயும், சேயும் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து லட்சுமியின் கணவர் முருகன் கூறுகையில், ‘முறையான சிகிச்சை மேற்கொள்ளாததால் எனது மனைவியும், குழந்தையும் இறந்துவிட்டனர். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம். இனியாவது டாக்டர்கள் கவனமுடன் செயல்பட்டு யாரும் உயரிழக்காமல் தடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, ‘லட்சுமியின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் கவனமுடன் சிகிச்சை மேற்கொண்டோம். இருப்பினும் இறந்துவிட்டனர்’ என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் வீரராகவ ராவ் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story