வேலூர் அருகே சென்னை போலீஸ்காரரின் மனைவி தற்கொலை உடலை வாங்க மறுத்து வாக்குவாதம்


வேலூர் அருகே சென்னை போலீஸ்காரரின் மனைவி தற்கொலை உடலை வாங்க மறுத்து வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 May 2019 9:45 PM GMT (Updated: 11 May 2019 7:32 PM GMT)

வேலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சென்னை போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 28). இவர் சென்னை ஆவடியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சஞ்சய் தனது உறவினரான திருவாரூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் பவிதாவை (23), கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு பவிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பவிதா, சஞ்சய் இருவரும் கழனிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். சஞ்சய் விடுமுறையின் போது சென்னையில் இருந்து கழனிப்பாக்கம் வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சஞ்சய் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஏற்பட்ட தகராறில் பவிதா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பவிதாவின் தந்தை ராஜேந்திரன் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சஞ்சய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து பவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் வாங்க மறுத்து முறைப்படி தனது மகளின் கணவன் குடும்பத்தினர் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது ராஜேந்திரன் தரப்பினர் மற்றும் போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, சஞ்சய் உறவினர்கள் சஞ்சய்யை போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். நாங்கள் எப்படி உடலை வாங்க முடியும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பவிதாவின் உடலை கணவர் சஞ்சய் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வேலூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story