நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு


நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 May 2019 9:15 PM GMT (Updated: 12 May 2019 8:32 PM GMT)

நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). விவசாயி. இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் அந்த வீட்டில் யாரும் குடியேறவில்லை.

நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் இருந்து 2 முறை பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு, சமையல் அறை ஆகியவை சேதமடைந்து இருந்தன. ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் சிதறிக்கிடந்த வெடிகுண்டு துகள்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கணேசனுக்கு சிவா என்ற நாராயணன், அருள் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்களா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சிவா என்ற நாராயணன், அவருடைய தம்பி அருள் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கீழநத்தம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த நெல்லையை அடுத்த சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த அருண் (32), கீழநத்தத்தை சேர்ந்த கண்ணையா (54), மகாராஜன் (30), பேட்டையை சேர்ந்த தாமரைக்கண்ணன் ஆகியோர் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் போலீசில் சிக்கினார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story