திருப்பரங்குன்றம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கடத்தல் 2 பேர் கைது


திருப்பரங்குன்றம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கடத்தல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 11:02 PM GMT)

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரை காரில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் நிறுவன தலைவரான செந்தில் ராஜா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். சென்னையை சேர்ந்தவரான செந்தில் ராஜா, மாற்றுத்திறனாளி ஆவார்.

அவர் தனது நண்பர்களுடன் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்து வந்தார். அப்போது காரில் வந்த சிலர் அவரை வழிமறித்து, கடத்திச் சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அவருடைய நண்பர்கள் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்ராஜாவையும், அவரை கடத்தியவர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், செந்தில்ராஜாவை சென்னையை சேர்ந்த தினேஷ்குமார், வினோத் குமார் ஆகிய 2 பேர் காரில் கடத்தியது தெரியவந்தது. அவர்கள் செந்தில்ராஜாவை காரில் ஏற்றி சிவகங்கை வரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரை வந்து இறக்கிவிட்டுள்ளனர்.

செந்தில் ராஜாவுக்கும், தினேஷ் குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்துள்ளது. அதில் ஏற்பட்ட பிரச்சினையால் செந்தில்ராஜாவை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து தினேஷ்குமார், வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே வேட்பாளர் செந்தில்ராஜாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story