சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் குங்குமப்பூ பறிமுதல் ரூ.13 லட்சம் தங்கமும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் குங்குமப்பூ பறிமுதல் ரூ.13 லட்சம் தங்கமும் சிக்கியது
x
தினத்தந்தி 16 May 2019 9:57 PM GMT (Updated: 16 May 2019 9:57 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாகுல் அமீது(வயது 42) என்பவர் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு திரும்பி வந்தார்.

அவர், விமான நிலையத்தில் ஒருவிதமான பதற்றத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.60 லட்சம் குங்குமப்பூ

அதில் 2 சூட்கேஸ் மற்றும் ஒரு அட்டைபெட்டி நிறைய ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சாகுல் அமீதுவை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், யாருக்காக அவற்றை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தங்கம் சிக்கியது

இதேபோல் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த கும்பகோணத்தை சேர்ந்த முகமது பைசல்(33) என்பவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பி வந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த தங்கத்தை அவர் யாருக்காக தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட முகமது பைசலிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story