குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 10:14 PM GMT)

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடியும், அதை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கோவை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து நேற்று காலை கோவை அப்பநாயக்கன்பட்டியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் குறைகளை கேட்டார். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் தினந்தோறும் அவதியுற்று வருவதாகவும், கல்வி, விவசாய கடன், பஸ் வசதி, கழிவறைகள் இல்லாத நிலை, கேபிள் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எடுத்து கூறினர்.

‘செல்பி’

குறைகளை கேட்டபிறகு பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும், தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே இருந்தபடி கேபிள் கட்டணம் ரூ.100-க்கு கொண்டுவரப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அத்தனை பிரச்சினைகளும் தி.மு.க. தலைமையில் அரசு அமைந்தவுடன் சரி செய்யப்படும்’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அந்த பகுதி மக்கள் தேனீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். தேனீர் குடித்த ஸ்டாலின், அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டார். அந்த பகுதியை சேர்ந்த முத்து-பவானி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தமிழரசி என்று பெயர் சூட்டினார். அப்போது பலர் அவருடன் கைகுலுக்கி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கால்நடை மருந்து

பின்னர், அப்பநாயக்கன்பட்டி பஸ் நிலையம் அருகே ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டினர். இந்த பகுதி பிரச்சினைகளை தீர்க்க பொங்கலூர் பழனிசாமி உறுதுணையாக இருப்பார் என்று கூறிய ஸ்டாலின், இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அந்த வழியாக 3 சக்கர சைக்கிளில் சென்ற மாற்றுத்திறனாளியை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். பின்னர் தந்தை பெரியார் நகர் பகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசுகையில்,

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. அ.தி.மு.க. அரசு இந்த பிரச்சினை உள்ளிட்ட எதையும் தீர்க்க அக்கறை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அறிக்கை

தமிழகம் வழக்கமாக பெறும் மழையளவில் 69 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டது என்பது தெரிந்தும், அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும், நிர்வாக படுதோல்வியாலும் சென்னை மாநகரம் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்தேக்க கொள்ளளவை உயர்த்த போகிறோம் என்று நிதிநிலை அறிக்கையிலும், மானிய கோரிக்கைகளிலும் அ.தி.மு.க. அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், ஒதுக்கப்பட்ட நிதிகளும் பதுக்கப்பட்ட நிதிகளாகி அதோகதியாகிவிட்டன. சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க. அரசு அறிவித்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கூட்டு குடிநீர்

குடிநீர் பஞ்சத்தை போக்க சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் கண்டுகொள்ளவில்லை. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது. மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள அனைத்து கூட்டு குடிநீர் திட்டங்களும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.

தூர்வாரப்படவில்லை

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியோ எவ்வித கூட்டு குடிநீர் திட்டங்களையும் நிறைவேற்றாமல் குறட்டை விட்டு தூங்கி விட்டது. தி.மு.க. சார்பில் நான் ஏரி, குளங்களை தூர்வார தொடங்கியவுடன் குடிமராமத்து என்று ஒரு திட்டத்தை பகட்டாக அறிவித்து இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக அ.தி.மு.க. அரசு கணக்கு காட்டியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்படவில்லை என்பது இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மூலம் பட்டவர்த்தனமாக தெரிகிறது. தாண்டவமாடும் தண்ணீர் பஞ்சம், எடப்பாடி பழனிசாமி அறிவித்த குடிமராமத்து திட்டத்துக்கு ஏற்பட்ட படுதோல்வி.

போர்க்கால நடவடிக்கை

ஆட்சிகள் மாறும். ஆனால் அரசு நிர்வாகம் நிலையானது. ஆகவே சென்னை மாநகரம் உள்பட தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசின் தலைமை செயலாளரும், துறை செயலாளர்களும் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர்களும் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை எவ்வித காலதாமதமும் இன்றி செய்ய வேண்டும்.

மீஞ்சூர், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் நாளொன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்திடவும் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story