தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர்


தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர்
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 9:13 PM GMT)

தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை எம்.பி. என்று குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் ஒரு முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி அன்னபூரணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 கல்வெட்டுகள் திறக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டில், பேருதவி புரிந்தவர் என்று ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு கல்வெட்டில் பேருதவி புரிந்தவர்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மகன்களான ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதில், ஜெயபிரதீப் என்பதற்கு பதில் ஜெயபிரதீப்குமார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் இந்த கல்வெட்டில் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என எழுதப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணிக்கையே நடக்காத நிலையில் அவரை எம்.பி.யாக சித்தரித்து கல்வெட்டு வைக்கப்பட்டிருந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து வேறு பெயர்கள் பொறிக்கப்பட்டு தற்போது அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போலீஸ்காரர்

கல்வெட்டு வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட போலீஸ்காரர் வேல்முருகன் அதை வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேல்முருகன் கூறும்போது, ஜெயலலிதா தான் எங்களுக்கு எப்போதும் முதல்-அமைச்சர். ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு தேனி நாடாளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக பொறிக்கப்பட்டு விட்டது. இது, இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் என்று நினைக்கவில்லை. எனவே அந்த கல்வெட்டை மறைத்து வேறு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

சர்ச்சைகளும், சாதனைகளும்

வேல்முருகன் பல்வேறு சாதனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தகாரர். ஆறு, கடலில் நீண்ட தூரம் நீந்தி சென்று சாதனை படைத்தவர். கையில் காரையும், வயிற்றில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றி சாதித்தவர். இவரது சாகசத்துக்காக ஜெயலலிதாவிடம் விருது பெற்றுள்ளார்.

ஜெயலலிதா மறைந்தவுடன் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர். சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க கூடாது என்று தீக்குளிக்க முயன்றார். தொடர்ந்து காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியதால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

Next Story